Thursday 13 May 2010

மனிதம், கடவுளின் அற்புதப் படைப்பு - பாகம் 4

மனிதனுடைய உடல் வியாதியால் பாதிக்கப்பட்டால் அதற்கு தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டு , அவர் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ள வேண்டும் . இன்னொரு வியாதிக்கு கொடுக்கப்படும் மருந்தை வந்திருக்கும் வியாதிக்காக சாப்பிட்டால் , உடல் குணமாகுமா ? அதுபோலத் தான் மனிதனுடைய இதயமும் , மூளையும் அதனுடைய செயல்களை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது . இவை இரண்டும் அதனுடைய செயல்களை மாற்றிக் கொண்டு செயல்படுத்தினால் நிச்சயமாக அனர்த்தம் நிகழக்கூடும். மனிதனுடைய மூளையானது, இதயத்திலிருந்து உதிக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் வடிகால் கொடுக்கிறது . இந்த மூளை, இதயத்திலிருந்து பிறக்கிற என்ணத்திற்கு வடிவம் கொடுத்து அதற்கு தனியொரு அடையாளத்தை கொடுக்கிறது . மனிதனின் மூளை , ஒவ்வொரு எண்ணத்தையும் ஈர்த்துக் கொண்டு , நன்றாக ஆராய்ந்து , சிந்தித்து அதனை செயலாக்கமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டது . இத்தகைய அபார சக்தியைக் கொண்ட மூளை மனிதனை ஒரு இயந்திரத்தை போல
இயங்க வைக்கிறது .

ஈர்ப்புத் தன்மையைக் கொண்ட மனிதனுடைய மூளை , இதயத்திலிருந்து பிறக்கிற அனைத்து எண்ணங்களையும் தனுக்குள்ளே அடக்கி வைத்துக் கொள்கிறது . இந்த மூளை தேங்கிக் கிடக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் கிரகித்துக் கொண்டு , நல்லதையும் , நல்லது இல்லாததையும் வகைப்படுத்துகிறது . அப்படி வகைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு
எண்ணமும் இந்த பிரம்மாண்டத்தில் மைல்கணக்கு பயணம் செய்கிறது . பாதையில் பல இடையூறுகள் தோன்றினாலும் அதனை சமாளித்துக் கொண்டு , பயணத்தை நிறுத்தாமல் , எண்ணத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மீண்டும் ஒரு அதிர்வலையோடு மூளைக்கு திரும்புகிறது . ஒரு எண்ணத்தின் தொடக்கம் நோக்கத்தில் முடிவடைகிறது . எப்போது எண்ணம் பயணிக்க தொடங்குகிறதோ அப்பொழுதே அதனுடைய நோக்கமும் பயணிக்க தொடங்கி விடுகிறது . மனிதனுடைய மூளையிலிருந்து பயணிக்கிற ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு நோக்கத்தோடு தான் பயணிக்கிறது . எண்ணமும் நோக்கமும் இரண்டு தண்டவாளங்களை போல பயணிக்கிறது .

எண்ணத்தின் மூலம் மனிதனை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது . அவன் நல்லவனா , நம்பகமான மனிதனா என்று தெரிந்து கொள்கிறோம் . எண்ணத்திலிருந்து எழும்பும் நோக்கமானது ஒரு மனிதனை பற்றி முழுமையாக அறிய வைக்கிறது . நல்ல நோக்கத்தை கொண்டு பயணிக்கும் எண்ணமானது பலன்தரும் அதிர்வலையோடு பிறக்கிறது , நன்மை பயக்காத எண்ணமானது மாபெரும் அழிவை விளைவிக்கிறது . மனிதனுடைய மூளையானது ஒவ்வொரு எண்ணத்தினுடைய நோக்கத்தை ஒரு அதிர்வலையாக மாற்றி ஒரு சக்தியை படைக்கிறது . இந்த சக்தி பல அதிசயமான கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு கொடுத்திருக்கிறது . உதாரணத்திற்கு எடிசனின் மூளை மின்சாரத்தை கண்டுபிடித்து உலகத்தினுடைய இருளை அகற்றியது . தொலைக்காட்சிப்பெட்டி , கணணி , தொலைபேசி , கைபேசி , போன்ற பல நவீன கருவிகளை கண்டுபிடித்த மனிதனுடைய மூளையை அபார சக்தியென்று சொல்லலாம் . இத்தகைய
அபார சக்தியினால் விக்ஞானம் முன்னேற்றமடைந்து பல சாதனைகளை படைத்திருக்கிறது . நினைத்துப் பார்க்க முடியாத செயல்களையெல்லாம் செயலாக்கப்பட்டுள்ளது . எத்தனையோ அபூர்வங்கலை படைத்துள்ள மனிதனுடைய மூளை எப்போதும் சிந்தித்து கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருக்கிறது . இது மூளையின் இயற்கையான இயல்பாகும் . மனிதனின் வயது அதிகரிக்க அவனுடைய மூளை இடைவிடாது சிந்திப்பதால் காலப்போக்கில் சோர்வடைகிறது . இத்தகைய சூழ்நிலையில் மனிதனுடைய மூளை மெய்ஞானத்தை கைப்பற்றுகிறது , அவன் தியானத்தை கையாளுகிறான் .
இந்த மூளையானது மனிதனுடைய வாழ்க்கையை பாதிப்பாதியாக பிரிக்கிறது . இந்த மூளை , மனிதனுடைய வாழ்க்கையின் முதல் பாதியை
விக்ஞானத்தோடும் , கடைசி பாதியை மெய்ஞானத்தோடும் இணைப்பது மட்டுமில்லாமல், அந்தந்த காலகட்டத்தில் அவைகளின் பலன்களை அனுபவிக்க ஒரு அறிய வாய்ப்பைக் கொடுக்கிறது .

சிந்திக்கும் ஆற்றலைப் பெற்ற மனிதனுடைய மூளை சூழ்நிலையால்
உருவாகும் உணர்வுகளையும் அனுபவிக்கிறது . எல்லையில்லா
மகிழ்ச்சியால் மனிதனுடைய உணர்வுகள் பரவசமடைகிறது ,
தொடர்ந்து நிகழும் சோதனையால் அவனுடைய உணர்வுகள் வேதனையோடு வலிக்கிறது . ஆனால் எத்தகைய உணர்வையும் ஒரு கட்டுப்பாட்டோடு அனுபவித்தால் மனிதனுடைய மூளை தன்னுடைய சித்தத்தை இழக்காமல் ஒருநிலைப்படுத்தி செயல்படுகிறது . சித்தம் தவறிய மூளையானது இசகுபிசகாகவும் செயல்படலாம் , திடீரென்று செயலிழந்தும் போகலாம் . செயலிழந்த மூளை மனிதனுக்கு ஒரு அசைவற்ற நிலையைத் தருகிறது . அத்தகைய நிலை ஒரு மனிதனை நடைபிணமாக காட்டுகிறது .

மனிதனின் மூளை வயதுக்கு தகுந்தால் போல அவனை செயல்பட வைக்கிறது . பருவ காலத்தில் அவனை போட்டி போட்டுக் கொண்டு திறமையோடு படிக்க வைக்கிறது , இளமைக் காலத்தில் அவனை கடுமையாக உழைக்க வைத்து வருமானத்தை கொடுக்கிறது , முதுமைக் காலத்தில் அவனை அமைதியான பாதையில் பயணிக்க வைக்கிறது . இந்த மூளையானது அந்தந்த வயதில் செய்ய வேண்டிய செயல்களை மனிதனுக்கு எளிமையாக உணர்த்துகிறது . சிந்திக்கும் திறனும் , எண்ணங்களை வடிவமாக்கும் சக்தியைக் கொண்ட மனிதனுடைய மூளை கடவுளின் ஒரு அற்புதப் படைப்பு !!!!

Wednesday 12 May 2010

மனிதம், கடவுளின் அற்புதப் படைப்பு - பாகம் 3

இந்த புவியில் ஒவ்வொரு ஜீவராசியும் இதயத்தோடு ( அதாவது காற்றுப்பை என்று சொல்லப்படுவது ) பிறக்கிறது . ஜீவராசியின் இதயம் விரிந்து- சுருங்கும் செயல்பாட்டினை இடைவிடாது செயல்படுத்துகிறது . இதனை இதயத்தின் துடிப்பு என்று சொல்லுகிறோம் . இதயத் துடிப்புள்ளவரை ஒரு ஜீவனை உயிருள்ள உடலென்றும் , துடிப்பில்லை என்றால் உயிரற்ற சடலம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மையே .

மனிதனுடைய இதயத்திலிருக்கும் ஆசைகளை பற்றி முந்தைய பாகத்தில் எழுதியதை நினைவு கூருகிறேன். இந்த ஆசைகளுக்கு ஒரு வடிகால் கொடுக்க இறைவன் மனிதனுக்கு காற்றோடு உணர்வுகளை இணைத்து இதயத்தைக் கொடுத்திருகிறார் . இதயத்தின் உணர்வுகள் மனிதனுடைய இயற்கையான இயல்பை எடுத்துரைக்கிறது . இதய உணர்வுகள் சந்தோசம் , வேதனை , அமைதி , ரசனை ஆகியவைகளை மனிதனுக்கு அனுபவப்படுத்துகிறது . மனிதன் இந்த உணவுகளின் வழியே இயற்கையின் அழகை ரசிக்கிறான் , சந்தோசத்தில் வாய்விட்டு சிரிக்கிறான் , துயரத்தில் கண்கலங்க அழுகிறான் , வலியில் கதறித் துடிக்கிறான் . அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மனிதன் வெவ்வேறு உணர்வுகளை அனுபவிக்கிறான் . இதயப்பூர்வமான உணர்வுகள் மனிதனுக்கு அறியாமையை , நல்லதொரு உறவுப் பாலத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கிறது . உணர்வுகளின் உறவுப்பாலம் மனிதனுடைய நித்தியமான நிலையை நிர்ணயிக்கிறது . எதற்காக இந்த மனிதப்பிறவி ? மனிதப் பிறவியால் இந்தப் புவி என்ன பலன் அடைகிறது ? போன்ற இயற்கையான கேள்விகள் நமக்குள்ளே பிறக்கின்றன . உணர்வுகளின் உறவுப்பாலம் இந்த முதல் கட்ட கேள்விக்கு தகுந்த விளக்கத்தை கொடுக்கிறது . அதாவது மனிதப் பிறவியின் நோக்கத்தை அழகாக விளக்குகிறது .

இதயத்திலிருந்து பிறக்கும் உணர்வுகள் மனிதனுக்கு ஏன் இந்த உறவுப் பாலத்தை அமைத்துக் கொடுக்கிறது . இரண்டாவது கட்ட கேள்வியாக எழும்புகிறது. ஆசைகளைக் கொண்ட இதயமுள்ள மனிதன் எதையாவது முயன்று கொண்டே இருக்கிறான் . அதாவது அவன் ஏதோ ஒரு செயலைச் செய்வதற்கு உந்தப் படுகிறான் . உணவுகளின் உறவுப்பாலம் ஒரு செயலைச் செயல்படுத்துவதற்கு மனிதனுக்கு தூண்டுகோலாக உதவுகிறது . சந்தோசம் , பாதுகாப்பு ஆகிய இரண்டையும் பெறுவதற்கு இந்த உறவுப்பாலம் கைகொடுக்கிறது . மனிதனின் வெளிப்புற வாழ்க்கையோடு சந்தோசத்தை இணைத்துப் பேசப்படலாம் . மனிதன் , பொருள் மூலமோ அல்லது நபர் மூலமோ சந்தோசத்தைப் பெறுகிறான் .

மனிதனுடைய ஆசைகளுக்கு வடிகால் கொடுக்க இந்த உணர்வுகளின் உறவுப்பாலம் பெரிதும் உதவுகிறது . அதே சமயம் இந்த உணர்வுகள் ஒரு எல்லைக்கு அப்பாற்பட்ட ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் நடைமுறைக்கு ஏற்றமாதிரி சாதாரண வாழ்க்கையின் அவசியத்தை உணர வைக்கிறது . உணர்வுகளின் உறவுப்பாலம் மனிதனுக்கு போதுமான பாதுகாப்பை கொடுக்கத் தவறியதில்லை . இந்த பாதுகாப்பு மனிதனை ஒருபோதும் தனிமைப் படுத்தியதில்லை . அவனை எப்போதும் ஒரு துணையோடு இணைக்கிறது . இது மனிதனுக்கு சமூக இயல்பினையை மிகவும் அருமையாக உணர வைக்கிறது . அப்படி என்றால் உணர்வுகளுடைய உறவுப் பாலத்தின் அவசியத்தை மனிதன் நன்றாக அறிந்து கொள்கிறான் .

உணர்வுகள் இந்த உறவுப் பாலத்தை எவ்வாறு அமைத்துக் கொடுக்கிறது ? என்பது மூன்றாவது கட்ட கேள்வியாக தொடர்கிறது . இதற்கு பல உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் . பசி எடுக்கும்போது வயிறுக்கு உணவு தேவைப்படுகிறது , அதாவது அந்தக் கணத்தில் வயிறுக்கு உணவு மட்டும் தான் தேவைப் படுகிறது , எவ்வாறு பசிக்கிற வயிறு உணவோடு இணைத்துக் கொள்கிறதோ அதுபோல மனிதனுக்கு உணர்வுகளின் உறவுப்பாலம் எப்போது தேவைப் படுகிறதோ அப்போது மனிதன் அந்த உறவுப்பாலத்தோடு இணைந்து கொள்கிறான் . மனிதனுடைய உணர்வுகள் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியைப் போல செயல்படுகிறது . பல சேனல்களைக் கொண்டது இந்த தொலைக்காட்சிப்பெட்டி. எந்த சேனல் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறதோ அந்த சேனலை அவன் அதிகமாக விரும்பிப் பார்க்கிறான் . அதுபோலவே மனிதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பல்வேறு உணர்வுகளின் உறவுப்பாலத்தை உணருகிறான் . எந்த சூழ்நிலையில் அவன் உணர்வுகளை முழுமையாக அனுபவிக்கிறானோ , அவற்றையே அதிகமாக நேசிக்கிறான் . தேவைகள் மனிதனுக்கு உணர்வுகளின் உறவுப்பாலத்தின் அவசியத்தை உணர வைக்கிறது .

மனிதனுடைய இதயத்தில் ஆசைகள் பிறக்கின்றன . இந்த ஆசைகளுக்கு வடிகால் கொடுக்க இதயத்திற்குள் உணர்வுகளும் பிறக்கின்றன , இந்த ஆசை-உணர்வு சங்கமம் நல்லதொரு உறவுப்பாலத்தை உருவாக்குகிறது . ஆசைகளும் உணர்வுகளும் சேர்ந்து அதன்வழியே உருவாகிய உறவுப்பாலங்கள் ஆகியவைகள் அடங்கிய மனிதப்பிறவி கடவுளின் ஒரு அற்புதப் படைப்பே !!!

Monday 3 May 2010

மனிதம் , கடவுளின் அற்புதப் படைப்பு -பாகம் -2

இந்த உலகத்தில் ஆசையில்லாத மனிதனை தேடுவது வெறும் வெத்து வெட்டான காரியமென்று சொல்லலாம் . உலகத்திலுள்ள அனைத்து உயிருள்ள ஜீவராசிகளுக்கும் எண்ணற்ற ஆசைகளைக் கொடுத்து கடவுள் படைத்திருக்கிறார் . ஆசையில்லாத மனிதன் உயிரற்ற ஜடத்திற்கு சமமாக கருதப்படுகிறான் . கடவுள் என்பவர் ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிர் கொடுக்கும் போது ஆசை என்ற கலவையை சேர்த்து உருவாக்குகிறார் . இந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்ள ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக செயல்பட எண்ணுகிறான் . அவன் இந்த உலகத்தில் ஜனித்தவுடன் சுதந்திரமாக சுவாசிக்க ஆசைப்படுகிறான் . அவனுடைய பிறப்பிலிருந்து தொடங்கிய இந்தச் சின்ன சின்ன ஆசையானது எவ்வித தடையுமின்றி வளர்ந்து கொண்டே செல்கிறது . மனிதன் தன்னுடைய எண்ணற்ற ஆசைகளுக்கு வடிகால் கொடுக்க சுதந்திரமாக செயல்பட முற்படுகிறான் . மனிதனுடைய வாழ்க்கையில் இந்த சுதந்திரம் என்ற வார்த்தை என்ன மகத்துவத்தை பெறுகிறது ? மனிதன் சுதந்திரமாக செயல்படுகிறான் என்பதை எவ்வாறு அறிய முடியும் ? எவ்வித தடைகளின்றி அனைத்து இச்சைகளையும் நிறைவேற்றிக் கொள்பவனை சுதந்திர மனிதன் என்று சொல்ல முடியுமா ? அதாவது , மனிதன் வாழ்க்கையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறான் என்று சொல்லலாமா ?

மனிதனுடைய உடலுக்குள் இருக்கும் அனைத்து உறுப்புகளிலும் மிக முக்கியமானது துடித்துக் கொண்டிருக்கும் இதயமாகும் . இந்த இதயத்தில் வண்ண வண்ண கனவுகளை ஏந்திக் கொண்டு , அதனை நிறைவேற்றுவதற்கு தன்னம்பிக்கை என்ற துடுப்பையும் பெற்றுக் கொண்டு பிறக்கிறான் . மேலும் தன்னுடைய ஆசைகளை பூர்த்திச்செய்து கொள்ள சுதந்திரம் என்ற கருவியை பயன்படுத்துகிறான் . சுதந்திரம் என்ற கருவியும் , தன்னம்பிக்கை என்ற துடுப்பும் அவனுடைய ஆசைகளை நிறைவேற்றுகின்றன . உதாரணத்திற்காக அவன் இன்று நீலநிற சட்டையை அணிய விரும்புகிறான் . காலையில் தோசைக்கு பதிலாக ரொட்டியை சாப்பிட ஆசைப்படுகிறான் . இன்றைய பொழுதை பணியிடத்திற்கு செல்லாமல் தன்னுடைய இல்லத்தில் கழிக்க ஆசைப்படுகிறான் . இன்று காதலித்த பெண்ணை சந்திக்க ஆசைப்படுகிறான் . இப்படி அவனுக்குள் இருக்கும் இத்தனை ஆசைகளும் எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றப்படுகின்றன . அப்படிஎன்றால் அவன் சுதந்திரத்தை அனுபவிக்கிறான் என்று சொல்லலாம் . இந்த சுதந்திரம் என்ற கருவி அவனுடைய இதயத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு ஆசையை எந்தந்த இருப்பிடத்தை பெற்று இருக்கிறதென்று வகுக்க இயலாது . இந்த சுதந்திரம் மனிதனுடைய உயர்வு-தாழ்வு , ஏழை- பணக்காரத் தன்மையை பாகுபடுத்த இயலாது . இந்தச் சுதந்திரம் மனிதனுடைய இதயத்திற்குள் நிரம்பி வழியும் ஆசைகளை மட்டும் பூர்த்தி செய்யும் இயல்பைக் கொண்டது .

சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு மனிதனுடைய தன்னம்பிக்கை என்ற துடுப்பும் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் . தன்னம்பிக்கை என்பது மனிதனுடைய மனநிலையை குறிக்கிறது . மனமிருந்தால் மனிதன் எதையும் சாதிக்கும் வல்லமையை பெறுகிறான் . மனிதனுடைய மனம் சோர்வடைந்தால் அதாவது அவனுடைய தன்னம்பிக்கை தளர்ச்சி பெற்றால் , அவன் வாழ்க்கையை வெறுக்கத் தொடங்குகிறான் . அவன் விரக்திக்கு உட்படுத்தப்படுகிறான் . அவன் , அனைத்தையும் மறந்த நிலைக்கு தள்ளப்படுகிறான் . அப்போது அவனுடைய வாழ்க்கையில் சுதந்திரத்திற்கு இடமிருக்காது . ஆசைகளில்லாத மனிதனுடைய வாழ்க்கையில் சுதந்திரம் என்ற சொல்லிற்கு இடமிருக்காது . எனினும் , மனிதன் வாழ்க்கையில் எத்தகைய சுதந்திரத்தை அனுபவித்தாலும், இயற்கையின் நியதிகளையும் அவ்வப்போது கடைபிடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது . தன்னுடைய பெற்றோர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை அவனிடம் கிடையாது , அதுபோல குடும்பம் , அவனுடைய நிறம் ஆகியவைகளை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவன் பெற்று இருக்க சந்தர்ப்பமிருக்காது . இவையாவும் இயகையிலேயே அமையப் பெற்ற நியதிகள் என்று சொல்லலாம் . இதனை ஒவ்வொரு மனிதனும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு தான் வாழ வேண்டும் . அவனுடைய பிறப்போடு பிறந்த ஒரு சில இயற்கையின் நியதிகளை மாற்றிக் கொள்ள முற்பட்டாலும் அத்தகைய உண்மை எளிதில் மாற்றம் பெறக்கூடிய தன்மையை பெறவில்லை . அவன் ஜாதி , மதம் ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ முடியும் . ஆனால் பிறப்போடு ஜென்மித்த இயல்புகளை ஒருபோதும் மற்ற இயலாது .

எந்த மனிதனும் எல்லை மீறிய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதில்லை . அவனுடைய இதயம் ஒரு வட்டத்துக்குள் தன்னை அடிக்கிக் கொண்டு வாழ முற்படுகிறது . ஒரு கணம் அவனுடைய இதயமானது உணர்ச்சிவசத்தால் எல்லை மீறிய ஆசையை அனுபவிக்க முற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் . எல்லை மீறிய ஆசையால் ஒரு ஜீவராசி இன்னொரு ஜீவராசிக்கு வேதனை மிகுந்த வலியைக் கொடுக்கிறது . இந்த மாதிரியான மாபெரும் பிழையை எந்த மனிதனின் இதயமும் செய்யத் துடிப்பதில்லை . ஒவ்வொரு மனிதனும் கட்டுப்பாடான வாழ்க்கையை வாழத் தான் முற்படுகிறான் . அவன் தன்னுடைய சுதந்திர உரிமையை இழக்காமல் தன்னம்பிக்கையோடு செயல்பட ஆசைபடுகிறான் . இதுதான் ஒரு சாதாரண மனிதனின் இயல்பான வாழ்க்கை என்று சொல்லலாம் . மனிதனுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் அவற்றில் ஆசைகளும் இருக்கும் ,ஆசைகளோடு தான் மனிதனுடைய வாழ்க்கையும் ஓடுகிறது , ஓடும் வாழ்க்கை காலச்சக்கரத்தோடு இணைந்து இயங்கி வருகிறது .

இதுதான் யதார்த்த நிலை . இந்த தர்க்கத்தை உணர முடியாத எந்தவொரு மானுடனும் இந்த உலகத்தில் ஜீவிப்பது அரிது . இதுவல்லவாமனிதம் - கடவுளின் அற்புதப் படைப்பு !!!

Sunday 2 May 2010

மனிதம் கடவுளின் அற்புதப் படைப்பு -பாகம் -1

வாழ்க்கைஎன்றால் போராட்டம்தான். இந்த போராட்டமானது மனிதனுடைய சமநிலையை தடுமாற வைக்கிறது . குடும்பம், உறவுகள் , நண்பர்கள் , பணி, தேவைகள் , ஆசைகள் ஆகியவைகள் ஒன்றாக இணைந்து உருவாகியது தான் மனிதனுடைய வாழ்க்கை . இவைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் போதுதான் தன்னுடைய சமநிலையை இழக்க நேரிடுகிறான் . மனிதன் , ஒன்றில் கவனத்தை செலுத்தி மற்றவையில் அக்கறை காட்டத் தவறினால் ஏதாவதொரு பிரச்சனயை வெகு விரைவில் சந்திக்கிறான் . இந்நேரத்தில் எந்தப் பிரச்சனையால் குழப்பப்பட்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் மூழ்கிய மனிதன் எளிதில் சோர்வடைகிறான் . எல்லை மீறிய சோர்வானது மனிதனுக்கு பைத்தியத்தின் ஆரம்ப காலகட்டத்தை நினைவுப் படுத்துகிறது .

வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் என்ற தத்துவத்தோடு வாழக் கற்றுக் கொண்டால் , மனிதனுடைய நிலையானது ஒரு பெரிய மரத்தின் வேரினைப் போல எந்த புயலுக்கும் அஞ்சாமல் , அசையாமல் நிமிர்ந்து தைரியத்தோடு எதையும் சமாளித்து கொள்ளுகிறது . மனிதனுடைய வாழ்க்கை என்பது காலச் சக்கரம் , அது யாருக்காகவும் , எதற்காகவும் நிற்பதில்லை , அது ஓடிக்கொண்டே இருக்கிறது . மனிதனும் வாழ்க்கை சக்கரத்தை சூழ்நிலைக்கு தகுந்தால்போல மாற்றிக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும் . பிரச்சனைகளும் , போராட்டமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை . இடிதாங்கி போல அனைத்தையும் சகித்துக் கொண்டு பொறுமையோடு அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் மனிதன் ஒரு நிலையான வாழ்க்கையை ஏற்ற்று , காலச்சக்கரத்தின் பாதையோடு தன்னுடைய வாழ்க்கை பாதையை சமமாக சீர்படுத்திக் கொள்கிறான் .

மனிதனுடைய மனத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான எண்ணங்கள் பிறக்கின்றன. அவை அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுக்க இயலாது . மேலும் மனிதனின் மனத்திலிருந்து நல்லுதும் , அழிவதும் கலந்த எண்ணங்களாக உதிக்கின்றன .

உழைக்கும் கரங்கள் , தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நல்ல எண்ணங்களுக்கு செயலாக்கம் கொடுக்கிறது . எண்ணங்கள் உதிப்பதற்கு மனமும் , அதைபற்றி சிந்திப்பதற்கு மூளையும், அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு கரங்களும் மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் . என்றாவது தன்னிடம் இப்படிப்பட்ட அற்புதங்கள் இருப்பதை மனிதன் சிந்தித்ததுண்டா . சில சமயம் தன்மீது கொண்டுள்ள அபார நம்பிக்கையால், மனிதன் தெரியாமல் அழிவை தரக்கூடிய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்து பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறான் . துன்பத்தில் தத்தளிக்கும் போது மனிதன் , தவறான பாதையின் கடைசிக் கட்டமான அழிவின் விளிம்பிற்கு வந்தடைகிறான் . அப்போது ஆன்மிகம் அவனை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது . மனிதன் வாழ்க்கை சாகரத்தில் பிரச்சனையால் மூழ்கும் போது இந்த ஆன்மீகமானது அருமையான துடுப்பாக பயன்படுகிறது .

மனிதன் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஆன்மீகத்தின் மூன்று வழிகளான பக்தி மார்க்கம் , கர்ம மார்க்கம் , ஞான மார்க்கம் ஆகியவற்றில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் . மனதை அங்குமிங்கும் அலைபாய விடாமல், சிந்தனையை ஒருநிலைபடுத்தி மனிதன் சமநிலையை இழக்காமல் வந்திருக்கும் இன்னல்களை தைரியத்தோடும் , விவேகத்தோடும் சந்திக்கிறான் . மனிதனுக்குள் ஒரு சக்தி அடங்கி இருக்கிறது . ஒரு சகதிக்குள் மனிதன் அடங்கி இருக்கிறான் . இதுவல்லவா" மனிதம் கடவுளின் அற்புதப் படைப்பாகும் ."